திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை பாமக தொண்டர்களிடம் அறிமுகப்படுத்தும் கூட்டம் அக்கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் மா.செல்வராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து பாமக தொண்டர்களிடையே, மாநில துணைத் தலைவர் துரை ஜெயவேலு, மாவட்டச் செயலர் குபேந்திரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை அறிமுகப்படுத்தினர். அப்போது, பாமக-வினர் அதிமுக வேட்பாளரை வெற்ற பெறச் செய்ய தேர்தல் பணி ஆற்றுவோம் எனத் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய வேணுகோபால் கடந்த தேர்தலில் நான் 3 லட்சத்து 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பாமக-வினரின் துணையோடு தற்போது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், பொன்னேரி எம்எல்ஏவுமான பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், ஒன்றிய அதிமுக செயலர் கோபால் நாயுடு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் உள்ளிட்ட அக்கட்சியினரும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமக-வினரும் பங்கேற்றனர்.