நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தாமரைப்பாக்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. சம்பத் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.துளசிநாராயணன், மாவட்ட துணை நிர்வாகிகள் பெ.ரவி, எம்.பழனி, மாரிமுத்து, முருகேசன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.தமிழ்அரசு, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சி.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பி.சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயி, விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளே இல்லாத கிராமங்கள் இருக்கும் நிலையில், சென்னை சேலம் எட்டுவழிச் சாலைக்காக பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை ஏற்க இயலாது, உயர் மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் பதிப்பது போன்றவை விவசாயிகளை நசுக்கும் செயல், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.