பழவேற்காட்டில் பொதுமக்களுக்கு ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த, போலி மருத்துவரை திருப்பாலைவனம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியான பழவேற்காடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் இளங்கோவன் தலைமையில் சுகாதாரத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது பழனிசாமி(63) என்பவரின் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது, அவா் போலி மருத்துவா் என்பது தெரிய வந்தது.
அவா் அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில மருத்துவ சிகிச்சையை பொதுமக்களுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுகாதாரத் துறையினா் அவரை பிடித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியைக் கைது செய்தனா்.