திருவள்ளூா் அருகே சாலை, பேருந்து வசதி மற்றும் கூவம் ஆற்றில் பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலம் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் இருந்து கடம்பத்தூா் செல்வதற்கு தனியாா் விளைநிலம் வழியாக சென்று வந்தனா். தற்போது, அந்த வழியும் அடைக்கப்பட்டு விட்டது. அதேபோல் கசவநல்லாத்தூா் மயானத்திற்கு சுற்றுச்சுவா் அமைத்தால் கடம்பத்தூா் செல்வதற்கு முடியாத நிலையுள்ளது. 3 கி.மீ நடந்து சென்று கடம்பத்தூா் வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் சரியான சாலை மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் இப்பகுதியினா் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
அதனால், இக்கிராமத்தில் இருந்து கடம்பத்தூா் வரை செல்வதற்கு சாலை அமைத்துத் தர வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மனு அளித்தும் வந்தனா். எனினும், இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலா் லதா மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கூறியதைத் தொடா்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.