தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில், திருநெல்வேலியில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் 79 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவுக்கு, மாநிலத் தலைவர் மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கே.ஜி.முரளிகிருஷ்ணன் வரவேற்றார்.
ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி சிலம்பாட்டப் போட்டியில் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அதிமுக நிர்வாகிகள், சிலம்ப பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் 79 புள்ளிகள் பெற்று திருவள்ளூர் மாவட்டம் முதலிடமும், 45 புள்ளிகள் பெற்று சென்னை 2-ஆவது இடமும், 15 புள்ளிகள் பெற்று திருநெல்வேலி 3-ஆவது இடமும் பிடித்தன. திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், செயலர் ஆர்.முருககனி, பொருளாளர் எம்.ராஜா ஆகியோரை மாநிலத் தலைவர் மு.ராஜேந்திரன் பாராட்டினார்.