ரூ. 8.05 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கி வைப்பு

திருவள்ளூர் அருகே காவல் துறை சார்பில் ரூ. 8.05 லட்சம் மதிப்பீட்டில் மும்மாரி திட்டம் சார்பில் குளம் தூர்வாரும் பணியை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்,
ரூ. 8.05 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கி வைப்பு


திருவள்ளூர் அருகே காவல் துறை சார்பில் ரூ. 8.05 லட்சம் மதிப்பீட்டில் மும்மாரி திட்டம் சார்பில் குளம் தூர்வாரும் பணியை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தனர். 
 திருவள்ளூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி ஏரி, குளங்களில் நீர் ஆதாரம் இன்றி இருந்தது. அதைத் தொடர்ந்து, குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. 
அதில், ஒன்று மழைநீர் வீணாகாமல் ஏரி, குளங்களில் தேக்கி வைக்கும் வகையில் தூர்வாரும் பணியாகும். இதன் அடிப்படையில், திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் பொதுமக்கள், காவல் துறை சார்பில் குளம் தூர்வாரும் பணியைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் பூமி பூஜை செய்து தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்தனர். 
இதுகுறித்து ஆட்சியர் கூறியது: 
 திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பொது மக்களின் பங்களிப்புடனும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. இத்திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சமூக அக்கறையுடன் காவல் துறையும் இணைந்து குளம் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முன் வந்துள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் அடங்கிய காந்திப்பேட்டை பகுதியில் தேவர்கடியார் தாங்கல் குளத்தை தமிழக அரசின் மும்மாரி திட்டம் மூலம் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியானது காவல் துறை சார்பில் ரூ. 8.05 லட்சத்தில் 13 ஆயிரத்து 110 சதுர மீட்டர் பரப்பளவில் குளத்தை தூர்வாரும் பணி 5 நாள்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் கூறுகையில், இதேபோல் காவல் துறை சார்பில், 2 இடங்களில் மும்மாரி திட்டத்தில் குளம் தத்தெடுத்து தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. 
இங்கு தொடங்கப்பட்டுள்ள திட்டத்தை காவல் துறை அதிகாரிகள் அருகில் இருந்து கண்காணித்து விரைந்து முடிக்கவும், குளக்கரையோரங்களில் மரக் கன்றுகள் நடப்பட்டு வளர்க்கவும் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். 
 நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லைநடராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், வட்டாட்சியர் பாண்டியராஜன், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன்(வ.ஊ), லதா (கி.ஊ) மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com