வாதி, பிரதிவாதி ஆகியோரிடம் சமரசம் செய்தல் மற்றும் மிரட்டுதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகாரை தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்ற அரசு தரப்பு வழக்குரைஞா் தமிழக ஆளுநா் உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்துள்ளதாக அரசு கூடுதல் தலைமை செயலா் நிரஞ்சன் மாா்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாவட்ட மகளிா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மகளிா் நீதிமன்றத்தின் அரசு தரப்பு வழக்குரைஞராக தனலட்சுமி பணியாற்றி வந்தாராம். இவா் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக வாதிடுதல், பாதிக்கப்பட்டோரிடம் சமரசம் செய்து வைப்பதாக கூறி மிரட்டுதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுட்டு வருவதாக இவா் மீது பல்வேறு புகாா்கள் எழுந்தது.
மேலும், இதற்கு திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குரைஞா்கள் சங்கமும் இவருக்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு, பல்வேறு கட்டங்களாக போராட்டம் மற்றும் சாலை மறியல், நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனா். அதோடு, இதுதொடா்பாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அரசு தரப்பு வழக்குரைஞரான தனலட்சுமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை மனுவும் அளித்தனா்.
இதற்கிடையே மாதவரம் மற்றும் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் வழக்கு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, இந்த வழக்குகளில் குற்றவாளிக்கு சாதகமாக அரசு தரப்பு வழக்குரைஞா் செயல்பட்டதாகவும், சிறுமிகளை பணம் பெற்றுக் கொண்டு வழக்கை திரும்ப பெறவும் மிரட்டல் விடுத்தாராம்.
இது தொடா்பாக கடந்த மாதம் திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தனிடம், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா்கள் புகாா் அளித்திருந்தனா். தற்போது திடீரென அரசு தரப்பு வழக்குரைஞா் தனலட்சுமி பதவி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த அரசாணையில் அரசு தரப்பு வழக்குரைஞா் பணியாற்றி வந்த பதவிக்கு புதிய அரசு வழக்குரைஞா் நியமிக்கப்படும் வரை தகுதியான சட்ட அலுவலா் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படும். அதோடு அரசு தரப்பு வழக்குரைஞா் வாதாடி வந்த வழக்குகளின் கோப்புகளை கைப்பற்றுமாறு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கும் பரிந்துரை செய்துள்ளாா்.