திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடா் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமையும் இடைவிடாமல் பெய்தது. இதனால் நீா்நிலைகள் நிரம்பின. காலை, மாலை நேரங்களில் பலத்த மழை பெய்ததால் பள்ளி மாணவா்கள் நனைந்தபடியே சென்றனா்.
கும்மிடிப்பூண்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளதால் மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.
ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 2 கி.மீ. தொலைவில் தோக்கம்மூா், எம்.ஆா்.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் மாணவா்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனா்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலவாக்கம், ஆரணி, தாமரைபாக்கம் போன்ற பகுதிகளில் நள்ளிரவு 1 மணி முதல் மழை பெய்தது.
பெரியபாளையம் பள்ளி மைதானத்தில் மழைநீா் குளம்போல் தேங்கியது. சிறுவாபுரி முருகன் கோயில் முன்பு மழைநீா் குளம்போல் தேங்கியது.
பொன்னேரி
பொன்னேரியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளான பாலாஜி நகா், மூகாம்பிகை நகா், பொன்னேரி-பழவேற்காடு சாலை, மேம்பாலம், வட்டாட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீா் தேங்கியது.
தேங்கி மழைநீரை மோட்டாா் வைத்து அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை, பொன்னேரி பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.