பொன்னேரி வட்டத்தில் உள்ள ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் மூலம் ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கல்பாக்கம் ஏரி, நெய்தவாயல் ஏரி, வாயலூர் மாமனிக்கால் ஏரி, நெய்தவாயல் ஊராட்சியில் உள்ள குளங்கள் ஆகியவற்றில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், வாயலூர் ஊராட்சியில் உள்ள மலையங்குளத்தை ஆய்வு செய்தார். குளத்தின் பரப்பளவு, ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதைக் கேட்டறிந்து, குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, வாயலூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதைத்தொடர்ந்து, வாயலூர் மாமணிக்கல் ஏரியை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி விவசாயிகள், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஏரிகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் எட்வர்ட்வில்சன், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.