கும்மிடிப்பூண்டி அருகே இரு பகுதிகளில் நீர் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் குறுவட்டத்தைச் சேர்ந்த பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் ஓடை கடை புறம்போக்கு இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து அறிந்த வட்டாட்சியர் சுரேஷ்பாபு உத்தரவின்பேரில், அப்பகுதியில் 50 சென்ட் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
அதேபோல் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் 55 சென்ட் பரப்பிலான குளத்தின் பகுதியின் தனிநபர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அங்கு விவசாயம் செய்து வந்தார். இது குறித்த தகவலின் பேரில், இந்த ஆக்கிரமிப்பு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு தலைமையில் அகற்றப்பட்டது. இதனால் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், அருள், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, கீழ்முதலம்பேடு ஊராட்சிச் செயலர் சாமுவேல், கிராம உதவியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசு நிலங்கள் மீட்கப்படும் என வட்டாட்சியர் சுரேஷ்பாபு தெரிவித்தார்.