வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல், இந்த வாரத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான ஆள்களைத் தேர்வு செய்யவும் இருக்கின்றனர். இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, தொழிற்பயிற்சி, பட்டயம் பெற்றவர்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இந்த முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது.