திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் சார்பில் இளம் பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்காமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தற்போதைய நிலையில் சத்தான உணவு உட்கொள்ளாததால் நாட்டில் ரத்த சோகை நோயால் இளம்பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
இதன் அடிப்படையில் வளர் இளம்பெண்கள், குழந்தைகள் ஆகியோர் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும்.
இதை வலியுறுத்தும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் கிரிஜாதேவி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், அனைவரும் குறிப்பாக பெண்கள் காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
கூட்டத்தில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், நிர்வாகிகள் பொன்மொழி, கிருபா, அருண்மொழி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.