ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சூளைமேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஊட்டச்சத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இப்பள்ளியில் மத்திய அரசின் "போஷன் அபியான்' திட்டத்தின் அடிப்படையில் உணவு திருவிழா, ஊட்டச்சத்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். இதில், மாணவர்கள் முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளைக் கொண்டு வந்திருந்தனர்.
மேலும், ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து ஊட்டச்சத்து உணவு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இவற்றை பெற்றோர்களும், பொதுமக்களும் பார்வையிட்டுச் சென்றனர்.
இதில், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.