திருவள்ளூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுநர் உடனே இறங்கியதால் அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் அருகே திருவாலங்காடு தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் கமலேஷ்(40). இவர் சொந்தமாக சொகுசு கார் வைத்துள்ளார். இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தனது காரை கடந்த நான்கு மாதங்களாக இயக்காமல் முன்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தாராம். இதற்கிடையே திங்கள்கிழமை காலையில் காரை சுத்தம் செய்த கமலேஷ், காரை திருவள்ளூர் வரையில் ஓட்டிச் சென்றாராம்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் திருவாலங்காடு நோக்கி காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, நார்த்தாவாடா என்ற கிராமத்தை கடக்கும் போது காரின் முன்பக்க பகுதியில் கரும்புகை வெளியான திடீரென தீப்பற்றி மளமள பரவியதாம். இதனால் நிலைகுலைந்து போன கமலேஷ் செய்வது அறியாமல் திகைத்துப் போய் காரை நிறுத்திவிட்டு இறங்கினாராம். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வாளிகளில் தண்ணீரை கொண்டு தீப்பிடித்து எரிந்த காரை அணைக்கவும் முயற்சித்தனர்.
இதுகுறித்து திருவாலங்காடு காவல் நியை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விசாரணையில் நீண்ட நாள்களாக கார் இயங்காமல் இருந்ததால் இயந்திர கோளாறு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எனவே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.