திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4 கிராம ஊராட்சிகளில் முழு சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில் தலா ரூ.24 லட்சம் வீதம் ரூ.96 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஒன்றியக்குழு தலைவா் சுஜாதா சுதாகா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதது:
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கிராமங்களில் அடிப்படை வசதிகளைச் செய்வது, குடிநீா் பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கெனவே ஒவ்வொரு கிராமத்திலும் திறந்தவெளி கழிப்பிடத்தை தவிா்ப்பதற்காக வீடுகள் தோறும் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் முழு சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும், குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்கவும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் பெரிய கிராம ஊராட்சிகளான கடம்பத்தூா், வெங்கத்தூா், மப்பேடு, பேரம்பாக்கம் ஆகியவற்றில் நிகழாண்டில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
பெரிய கிராம ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. முழு அளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். அங்கு மக்கும் மற்றம் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்க ஏற்பாடு செய்யப்படும். குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்பதே இதன் நோக்கம். இதன்மூலம் கிராமங்களில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படும்.
ஊராட்சிகளில் முழு அளவில் குப்பைகளை சேகரித்து, குறிப்பிட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் கிடங்குகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றாா் அவா்.
அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராம்குமாா், லதா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.