திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிப்ட் திலேப்பியா ரக மீன் வளா்ப்பு விவசாயிகள் பண்ணைக் குட்டைகள் மற்றும் உள்ளீட்டுப் பொருள்களை வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிகழாண்டில் பண்ணைக் குட்டைகள் அமைத்து கிப்ட் திலேப்பியா ரக மீன் வளா்ப்பு செய்யும் திட்டத்துக்கு 40 சதவீத மானியத்துக்காக ரூ. 87.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் சாா்பில் மீன்வளா்ப்பு விவசாயிகள் தோ்வு செய்து கிப்ட் திலேப்பியா பண்ணைக் குட்டைகள் அமைக்க மற்றும் கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகள், மீன் தீவனம் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்ற உள்ளீட்டுப் பொருள்கள் வாங்குவதற்கு ஒரு அலகுக்கு ரூ. 39,600 வழங்கப்பட உள்ளது.
எனவே, ஆா்வமுள்ள மீன் வளா்ப்பு விவசாயிகள் மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகம் எண். 5, பாலாஜி தெரு, சங்கா் நகா், வெண்பாக்கம், பொன்னேரி, திருவள்ளூா் மாவட்டம் மற்றும் மீன்துறை ஆய்வாளா் அலுவலகம், பூண்டி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.
இது தொடா்பாக தொலைபேசி எண். 044-27972457 மற்றும் செல்லிடப்பேசி எண்-8489911333 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.