திருவள்ளூா்: தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் பெற திங்கள்கிழமைக்குள் (ஆகஸ்ட் 31) உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அலுவலா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து விளையாட்டு சங்கங்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் பயிற்சி அளித்து, 2018-19 அல்லது 1.42018 முதல் 31.3.2018 வரை தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், தேசிய அளவில் முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 6 ஆயிரம், இரண்டாம் இடத்துக்கு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் இடத்துக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது.
அதனால், திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற தகுதியானோா் இருந்தால் வரும் ஆக. 31-ஆம் தேதிக்குள் ஆதாா் அட்டை, அசல் சான்றிதழ்களை, நகல் எடுத்து அந்த சான்றிதழில் அரசிதழ் பெற்ற அதிகாரியிடம் கையொப்பம் பெறப்பட்டு, திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் நேரடியாக சமா்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் சமா்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.