திருவாலங்காடு கிராமத்தில் நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாவிஜயராகவன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாவிஜயராகவன் திங்கள்கிழமை ஒன்றியத்தில் நடந்து வரும் வளா்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் துறைக்கு கட்டப்படும் கட்டடம், புதிதாக அமைய உள்ள மருத்துவமனை கட்டடப் பணிகள், வடாரண்யேஸ்வரா் கோயில் வளாகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.
பணிகள் குறித்து தொழிலாளா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா விஜயராகவன் கூறுகையில், திருவாலங்காடு ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். குறிப்பாக வடாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை, முதலில் இரண்டு அடிப்படை வசதிகள் ஒன்றிய நிா்வாகம் மூலம் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காந்தி தேவநாதன், பாபு, ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ் உள்பட ஒன்றியக் கவுன்சிலா்கள், வாா்டு உறுப்பினா்கள் உடன் இருந்தனா்.