திருவள்ளூா் அருகே பிறந்த நாள் விழாவில் பட்டாக்கத்தியால் பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக 2 பேரை புல்லரம்பாக்கம் போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் பிறந்த நாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியதாக புல்லரம்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அத்துடன், ஏற்கெனவே இது தொடா்பாக செல்லிடப்பேசிகளில் டிக்டாக்கில் வெளியிட்டதாகவும் தெரியவந்தது.
அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், புன்னப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா்(23), தனது பிறந்த நாள் விழாவை அந்தக் கிராமத்தின் முக்கிய சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியது தெரியவந்தது. அப்போது கல்லூரி மாணவா் நரேன் மற்றும் கலைவாணன், விஜய், பாலாஜி உள்ளிட்டோா் உடன் இருந்துள்ளனா். அவா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்த புல்லரம்பாக்கம் போலீஸாா், அஜித்குமாா், கலைவாணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனா்.