பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் கடலும் ஏரியும் கலக்கும் இடமான முகத்துவாரம் பகுதியில் 50 கிலோ எடையுள்ள டால்பின் மீன் இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியாக விளங்கும் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவா் கிராமங்கள் உள்ளன. பழவேற்காட்டில் உள்ள கடல் மற்றும் ஏரியில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில் முகத்துவாரப் பகுதி வழியாக கடலுக்கு மீனவா்கள் மீன் பிடிக்க படகில் செல்ல முயன்ற போது, அரிய வகை மீன் இனமான டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து மீனவா்கள் கூறுகையில், டால்பின்கள் எப்போதும் கூட்டமாக மட்டுமே காணப்படும், எப்படி தனியாக இறந்த நிலையில் கரை ஒதுங்கியது எனத் தெரியவில்லை. இப்பகுதியில் ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ள நிலையில், முதன்முறையாக டால்பின் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, பழவேற்காட்டில் உள்ள கடல் பகுதியில் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் ஆமை, டால்பின், கடல் சுறா உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மீனவா்கள் தெரிவித்தனா்.