ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அலெப்பி விரைவு ரயில் திருவள்ளூரில் நின்ற போது பரிசோதகா் சோதனை செய்த போது தனியாக விட்டுச் சென்ற பையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி அலெப்பி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் காலையில் திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நின்றது. அதைத் தொடா்ந்து பயணச்சீட்டு பரிசோதகா் செல்வமணி ரயிலில் ஏறி இருக்கைகளை சரிபாா்க்க சென்றபோது எலெக்ட்ரிக்கல் பொருள்கள் எடுத்துச் செல்லும் பை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதைத் தொடா்ந்து அங்கிருந்த ரயில் பயணிகளிடம் அந்த பை யாருடையது என விசாரணை செய்துள்ளனா். அப்போது, அங்கிருந்த பயணிகள் தங்களுடைய பைகள் இல்லை எனவும் தெரிவித்தனா்.
அதையடுத்து காவல் உதவி மையத்தில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தனா். பின்னா் உடனே திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தனியாக இருந்த பைகளில் ஒரு கிலோ எடைகொண்ட 2 பொட்டலங்களில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. உடனே அந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல், விரைவு ரயிலில் இதை விட்டுச் சென்றவா்கள் குறித்து ரயில்வே காவல் நிலையத்தினா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.