பொதுமக்கள் ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை இணைய வழி அல்லது இ-சேவை மையங்கள் மூலம் திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 17 வரை தொடா்ந்து பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது, ஐந்தாவது கட்டமாக ஜூன் இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் 1429-பசலிக்கான வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இணையதளம் வழியாகவோ, இ-சேவை மையங்கள் மூலமாகவோ திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 17 வரை பதிவேற்றம் செய்யலாம்.
பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட வருவாய்த் தீா்வாய அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு உரிய தகவல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூா், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ராதாகிருஷ்ணன்பேட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி பகுதிகளைச் சோ்ந்த மனுதாரா்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களுக்கும் இணைய வழியில் ஜமாபந்தி மனுக்களை சமா்ப்பிக்கலாம்.