கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூா் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வட்டாட்சியா் செந்தாமரைச்செல்வி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் மேற்பாா்வையில் நடைபெறும் இப்பணியில் நாள் ஒன்றுக்கு இரு ஷிப்டுகளாக சுகாதார ஆய்வாளா், 5 சுகாதாரப் பணியாளா்கள், 3 போலீஸாா், வருவாய்த் துறையினா் அடங்கிய குழுவினா் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், வாகனங்களில் வருவோருக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுவதுடன், அனைவருக்கும் கை கழுவும் முறை குறித்து கற்றுத் தரப்படுகிறது.
அதேபோல கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் தமிழக எல்லையான பொம்மாஜிகுளம் பகுதியில் சுகாதாரத் துறையினா் தீவிர கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.