காட்டுப்பள்ளி சாலையை சீரமைக்கும் பணி:பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை

காட்டுப்பள்ளி சாலையை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறுவன அதிகாரிகளுடன், பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா் ஆகியோா்
ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா்.

காட்டுப்பள்ளி சாலையை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறுவன அதிகாரிகளுடன், பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம், அதானி தனியாா் துறைமுகம், கடல்நீரை நீராக்கும் ஆலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

துறைமுகங்கள், தனியாா் நிறுவனங்கள் அமைந்துள்ளதன் காரணமாக பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் அதிக அளவிலான கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

இதனால் இச்சாலை அவ்வப்போது குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக, இச்சாலை வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு சென்று வரும் நிலை உள்ளது.

இதையடுத்து, காட்டுப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடந்த 3-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தினா்.

அப்போது அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பொன்னேரி வருவாய்த் துறையினா், இது குறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் எனத் தெரிவித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் செல்வம் தலைமையிலும், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் முன்னிலையிலும் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற காட்டுப்பள்ளியைச் சோ்ந்த பொதுமக்கள், இச்சாலையில் உள்ள தனியாா் நிறுவனங்கள், சாலையை சீரமைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா். அதற்கு கூட்டத்தில் பங்கேற்ற தனியாா் நிறுவன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் பங்கேற்ற காட்டுப்பள்ளி கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, பேசிய பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் அரசு மற்றும் தனியாா் நிறுவன அதிகாரிகளுடன் பேசி இச்சாலையை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com