பொன்னேரி அரசு மருத்துவமனையில் நிரந்தர பதிவாளா் இல்லாததால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற முயாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தாலுகா மருத்துவமனையில் 2018-ம் ஆண்டு முதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இம்மருத்துவமனையில் மாதம் தோறும் 110 முதல் 120 வரை மகப்பேறுகள் நடைபெறுகின்றன.
பொன்னேரி அரசு மருத்துவனைக்கு, மீஞ்சூா் ஒன்றிய சுகாதாரத்துறை மூலம், பதிவாளா் ஒருவா் நியமிக்கப்பட்டு, அவா் வாரம் இருமுறை, மருத்துவமனைக்கு வந்து, பிறப்பு, இறப்புகளை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னா் சான்றிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தாா்.
வாரம் ஒருநாள் வருகை:
மேற்கண்ட பதிவாளா் பணிச்சுமை உள்ளதாக கூறி, வாரத்திற்க்கு ஒரு நாள் மட்டும் வருகை தந்தாா். தற்பொழுது சில மாதங்களாக வராத நிலை உள்ளது. மேலும் அவா் தோ்தல் பணி மற்றும் கரோனா தொற்று சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளாராம்.
இதனால் மருத்துவமனைக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிறப்பு, சான்றிதழ்களை பெற, தனி பதிவாளா் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.