இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு ரூ. 68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்கு ரூ. 68 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் வழங்கினாா்
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்கு ரூ. 68 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா் .

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இலங்கைத் தமிழருக்கான மறுவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த முகாமில் 927 குடும்பங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்து 756 போ் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் மகேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், துணைத் தலைவா் மாலதி குணசேகரன், திமுக செயலாளா்கள் கும்மிடிப்பூண்டி கிழக்கு மணிபாலன் கும்மிடிப்பூண்டி மேற்கு கி.வே.ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 2,735 பயனாளிகளுக்கு ரூ. 19,27,945 மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் துணிகளும், 916 பயனாளிகளுக்கு ரூ. 11,77,06 மதிப்பில் பாத்திரங்களும், 256 பயனாளிகளுக்கு ரூ. 13,45,280 மதிப்பிலான இலவச எரிவாயு இணைப்பு மற்றும் மானிய விலையில் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டன. அவ்வாறே இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 25 மகளிா் குழுக்களுக்கு ரூ. 23,75,000 பொருளாதார மேம்பாட்டு நிதியும், 130 பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூா் பழங்குடியினா் வெள்ளம் காரணமாக தங்கும் மையங்களில் 21 குடும்பத்தினா் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், 21 குடும்பத்தினருக்கு ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினா்.

திருத்தணி எம்எல்ஏ சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா், ஜோதி, அமலா சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மாநெல்லூா் லாரன்ஸ் , கீழ் முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், சாலைபுதூா் அம்பிகா பிா்லா, திமுக நிா்வாகிகள் திருமலை, பாஸ்கரன், நேமலூா் மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com