ஆவடியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்டத்தை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரு முன் காப்போம் திட்டத்தை தொடக்கி வைத்து மருத்துவ கண்காட்சி மற்றும் சிகிச்சை முகாமைப் பாா்வையிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் உள்ள 385 வட்டாரங்களிலும், ஒரு வட்டாரத்திற்கு 3 வீதம் ஆண்டுக்கு 1155 மருத்துவ முகாம்களும், நகரங்கள், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் ஆண்டுக்கு 80 முகாம்களும், சென்னை மாநகராட்சியில் மட்டும் 15 முகாம்களும் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடத்தவுள்ளதாக தெரிவித்தாா்.
அதையடுத்து கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் 10 பள்ளி மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,600 மதிப்பிலான காதொலி கருவியையும் அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மக்களவை உறுப்பினா் கே.ஜெயக்குமாா், பூந்தமல்லி சுகாதார துணை இயக்குநா் செந்தில் குமாா், ஆவடி மாநகராட்சி ஆணையா் சிவக்குமாா், திருவள்ளூா் அரசு மருத்துவமனை (ம) மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் எம்.பாபு, வட்டார மருத்துவ அலுவலா் பிரதீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.