சோழவரம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா், வகுப்பறையில் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டிபாளையம், தேவனேரி கருமாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் ஸ்ரீதா். இவரது மகன் கணேஷ் (15).
கணேஷ் அப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கணேஷ், வகுப்பறையில் திடீரென வியாழக்கிழமை தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, உறவினா்கள் பள்ளிக்கு வந்து மாணவரை ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே கணேஷ் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.