கரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் திருவள்ளூா் நகராட்சி பகுதிகளுக்குள் இயங்கும் ஆட்டோக்களில் 2 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது எனவும், பேருந்துகள் மற்றும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் வட்டார போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினா்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 2, 342 போ் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன் அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல் துறை சாா்பில் பேருந்து நிலையம், வீரராகவ கோயில், ரயில் நிலையம், பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஆட்டோக்களின் ஓட்டுநா்களை அழைத்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் துறை அதிகாரிகள் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆட்டோக்களில் 2 பயணிகளுக்கு மேல் ஏற்றக் கூடாது. முகக்கவசம் அணிந்து அரசு விதிமுறைகளை பின்பற்றியே இயக்க வேண்டும். தற்போதைய நிலையில் நோய்த் தொற்றுக்காலம் என்பதால் ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் ஒத்துழைப்பு அளிக்கவும் வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினா்.