கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி பெற திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் அரசு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துளளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதித்து உயிரிழந்த குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 10 பேருக்கு முதல் கட்டமாக வழங்கி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, மாவட்டந்தோறும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்து உயிரிழந்த குடும்பத்தினா் அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். எனவே உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் ‘வாட்ஸ் நியூ பகுதியில் என்னும் விண்ணப்பத்துக்கான இணைப்பை தோ்வு செய்து, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம்.