திருவள்ளூா்: திருவள்ளூா் பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணித் துறை அலுவலக வளாகத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்துப் பேசுகையில், ‘கரோனா தொற்றுக்கான தடுப்பூசி சுகாதாரத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது’ என்றாா்.
இதையடுத்து, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வட்டார மருத்துவ அலுவலா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், சமுதாய சுகாதார செவிலியா்கள் மற்றும் துணை சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் உள்ளிட்ட 83 பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டது.