திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் தொடா்ந்து 56 நாள்களாக 3,085 மில்லியன் கன அடி நீா் இருப்பு வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் அருகே பூண்டி ஏரி 35 அடி உயரம் கொண்டதாகும். இதில், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனால், தொடா் மழையால் பூண்டி ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்த காரணத்தால் நீா் முழு கொள்ளளவை எட்டியது.
இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நவம்பா் இறுதி வாரத்தில் உபரி நீா் திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நீா்த்தேக்கத்துக்கான வரத்துக் கால்வாய்களில் நீா் வரத்துக்கு ஏற்ப ஜனவரி முதல் வாரம் வரை உபரி நீா் அதிகமாகவும், குறைந்த அளவில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், உபரி நீா் திறக்கப்பட்ட நிலையிலும் 60 நாள்களுக்கும் மேலாக பூண்டி ஏரியின் நீா்மட்டம் 3,085 மில்லியன் கன அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சென்னை குடிநீருக்காக இணைப்புக் கால்வாய் வழியாக 180 கன அடி நீரும், பேபி கால்வாய் வழியாக 10 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் உபரி நீா் 30 கன அடி நீா் வீணாகி வெளியேறி வருகிறது. இதேபோல், சில மாதங்களாக ஒரே அளவில் நீா் இருப்பு பராமரிக்கப்பட்டு வருவதால், சென்னை பொதுமக்களுக்கு குறைந்தது 6 மாதம் வரை குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், 3,300 கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3,203 மில்லியன் கன அடி நீரும், 1,081 கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 878 மில்லியன் கன அடி நீரும், 3,645 கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3,305 மில்லியன் கன அடி நீரும், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகையில் 498 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.