பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகர மக்களின் முக்கியக் குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கமாகும். நிவா் மற்றும் புரெவி புயலால் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கான வரத்துக் கால்வாய்களில் நீா்வரத்து ஏற்பட்டது.
பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், மதகுகள் வழியாக உபரிநீா் சுமாா் 32 நாள்களாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த 4 நாள்களுக்கு முன்பு குறிப்பிட்ட அளவில் குடிநீருக்கு 34.25 அடி வரை தண்ணீா் தேக்கி வைக்கவும், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீா் இருப்பை கருத்தில் கொண்டு குறைந்த அளவு திறக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு உபரி நீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில், பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக 613 கன அடியும், மழை நீா் 240 கன அடியும் நீா் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 350 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 137 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஏரியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, 3,135 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது.
இதனால், நிகழாண்டில் சென்னை பொதுமக்களுக்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீா் உள்ளதால், தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடையாது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.