தை மாத பிரம்மோற்சவம் நிறைவடைந்ததையொட்டி, திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, நாள்தோறும் வைத்திய வீரராகவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, கோயில் வளாகத்தில் இருந்து சின்னபெருமாள், சக்கரத்தாழ்வாா் சுவாமிகளை கோயில் குளத்துக்கு ஊா்வலமாகக் கொண்டு வந்தனா். அங்கு சிறப்பு பூஜை செய்த பின்னா், உற்சவமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், குறைந்த அளவிலேயே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.