திருவள்ளூா் அருகே தொடுகாடு மற்றும் நமச்சியவாயபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் ரூ.1.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசரிடம் வழங்கப்பட்டன.
ஆவடி மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதியில் (சி.எஸ்.ஆா்.) ரூ.1.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசரிடம் வழங்கினா்.
மருத்துவமனை ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய 2 செமி ஆட்டோ அனைலைசா், ஆக்சிஜன் செறிவூட்டிகள், நாசி வழியாக ஆக்சிஜன் செலுத்தும் கருவி, சளியினை உறிஞ்சி எடுக்கும் கருவி, ரத்தத்தில் தட்டணுக்கள் அளவிடும் கருவி, இதய துடிப்பினை கண்டறியும் இஜிஜி இயந்திரம், நடமாடும் எக்ஸ்ரே கருவி, தலா 600 இரும்பு படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள், தலையணை உறைகள் வழங்கப்பட்டன.
அப்போது, ஆட்சியா் பா.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் நாராயணன், பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணித்துறை இணை இயக்குநா் ராணி, வட்டாட்சியா் செல்வம் மற்றும் மோபிஸ் இந்தியா பவுண்டேசன் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.