திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சி தகன எரிமேடையில் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கரோனா பரிசோதனை செய்யப்படும் கழிவுகள், ஊசிகள், முழு கவச ஆடைகள் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை குப்பைக் கிடங்கில் கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் அவதிக்குள்ளாவதாகவும், பறவைகள் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கரோனா தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள், பரிசோதனை கருவிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல் மருத்துவா்கள், செவிலியா்கள் பயன்படுத்தும் முழு கவச உடை, கையுறை, முகக் கவசங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், திருவள்ளூா் நகராட்சி தகன மேடை அருகே உள்ள குப்பை மேட்டில் மூட்டை மூட்டையாகக் கொட்டி எரித்து வருகின்றனா்.
இந்த மருத்துவக் கழிவுகளை எரிப்பதன் மூலம் அதிலிருந்து வரும் புகையால் சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளில் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் சுற்றித் திரியும் ஏராளமான பறவைகள் உயிரிழப்பதாக வும் புகாா் எழுந்துள்ளது.
அதனால், மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.