திருவள்ளூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவள்ளூரை அராக் பாக்கம் கசுவா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65). இவரது மகள்கள் ஹேமலதா(35), சாந்தி( 31). இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கடந்த சில நாள்களாக வீடு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தை, இரு மகள்கள் தூக்கில் சடலமாக அழுகிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் ஆய்வு செய்தபோது குடும்பத்தில் அதிக பிரச்னைகள் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்போது அவர்கள் இருக்கும் வீடு மற்றும் அவர்கள் பெயரில் உள்ள சொத்துகள் கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதல்கட்ட விசாரணையில் இறந்த நபர் செல்வராஜ் அவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது மூத்த மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வீட்டில் இருப்பதாகவும் கடைசி மகளுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடுவில் பிறந்த மகள் நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.