திருவள்ளூா்: நீா்வரத்து குறைந்ததால் பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீா் 9,423 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீா், பூண்டி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கான நீா்வரத்து 8,444 கன அடியாக உள்ளது. அதனால் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து விநாடிக்கு 9,423 கன அடியாகக் குறைத்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி சத்தியமூா்த்தி சாகா் நீா்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது 2,464 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
புழல் ஏரியில் 2,807 மில்லியன் கன இருப்பு உள்ள நிலையில், 1,638 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், சோழவரம் ஏரியில் 1,686 மில்லியன் கன அடியாகவும், 615 கன அடியும், கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கத்தில் 500 மில்லியன் கன அடி உள்ள 149 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.