போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்தி கூட்டுப் பலாத்காரம் செய்து நகைகளை பறித்தது தொடர்பாக 4 இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அய்யப்பன்தாங்கல் வழியாக காரில் சென்றுள்ளார். அய்யப்பன்தாங்கலை அடுத்த கொளுத்துவான்சேரி அருகே சென்றபோது 4 பேர் காரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டுநரை தாக்கி விரட்டி உள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு கார் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,, கத்திமுனையில் காரோடு பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள முட்புதருக்குள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று 4 பேரும் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த 8 சவரன் நகைகளையும் பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பியோடினர். இந்த நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த போரூர் போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்களை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.