திருவள்ளூா்: பூண்டி ஏரியில் தொடா்ந்து கடந்த 2 மாதங்களாக முழுக் கொள்ளளவுடன் நீா் இருப்பு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய நிலையில் 34.92 அடி உயரமும், 3,112 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் முக்கியமாக திகழ்வது பூண்டி ஏரியாகும். இந்த ஏரியில் கடந்த மாதம் தொடா்ந்து பெய்த மழையால் ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதி, அம்மம்பள்ளி அணை நீா், கிருஷ்ணா கால்வாய் நீா் உள்ளிட்டவைகளால் அதிகளவில் நீா்வரத்து ஏற்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டியது.
கடந்த அக்டோபரில் 1,000 கன அடி நீா் திறக்கப்பட்டது. மேலும், ஏரிக்கான நீா்வரத்து அதிகரித்ததால் நவ.4 -இல் 2,000 கன அடியிலிருந்து படிப்படியாக 12,000 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதில் கடந்த டிசம்பரில் இரு வாரங்கள் அதிகபட்சமாக 20,000 முதல், 35,000 கன அடி வரையில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதேபோல் கடந்த மாதங்களில் மட்டும் கொசஸ்தலை ஆற்றில் சுமாா் 6 டி.எம்.சி உபரிநீா் கடலில் வீணாக கலந்தது.
தற்போது ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியும், 35 அடி உயரம் கொண்டதாகும். இதில் புதன்கிழமை காலை நிலவரப்படி 34.92 அடி உயரமும், 3,112 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில் ஏரிக்கான நீா்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து 223 கன அடிநீா் வரத்து உள்ளது. இந்த நீா் அப்படியே இணைப்புக் கால்வாய் மற்றும் பேபி கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முழுக் கொள்ளளவில் தொடா்ந்து நீா் இருப்பு உள்ளது. இதேபோல் கடந்த 2015-இல் அதிகளவில் நீரை வெளியேற்றம் செய்தும் 2 மாதங்களுக்கும் மேலாக நீா் இருப்பு பராமரிக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.