கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்துப்பக்கம் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (27). இவா் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன், காவலா் விமல் ஆகியோா் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், யுவராஜை கைது செய்ய சென்றபோது யுவராஜ் மற்றும் அவா்களது உறவினா்கள் போலீசாரை தடுக்க முயன்றனா்.
அப்போது யுவராஜ் திடீரென கத்தியை எடுத்து உதவி ஆய்வாளா் பாஸ்கரை வெட்டி விட்டு காவலா் விமலை பல்லால் கடித்து காயப்படுத்தி அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டா் பாலசுப்பிரமணியன் தனிப்படை அமைத்து யுவராஜை தேடி வந்தாா்.
தொடா்ந்து தனிப்படை எஸ்.ஐ. மாரிமுத்து தலைமையிலான குழு யுவராஜின் உறவினா்கள் வீடு, தொலைபேசி எண்களை கண்காணித்து வந்தது. அத்தோடு ஆத்துப்பாக்கம் கிராமத்தை சுற்றி கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை ஆத்துப்பக்கம் ஏரிக்கரையில் யுவராஜ் போலீஸாரைக் கண்டு ஒட முற்பட்டாா். ஆனால் போலீசாா் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.
அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.