திருவள்ளூா் அருகே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதி மீறி காதணி விழா நடத்தியவா்களுக்கு அபராதம் விதித்து வருவாய் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், திருமணம், காதணி விழாக்களில் நூறுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், முழு ஊரடங்கு, கரோனா விதிமுறைகள், மீறி மணவாளநகா் ஒண்டிக்குப்பம் பகுதியில் தெருக்களில் கடைகள் திறந்திருந்ததாகவும், கூட்டம் சோ்த்து காதணி விழா நடத்துவதாகவும் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு புகாா் வந்தது.
இதையடுத்து திருவள்ளூா் கோட்டாட்சியா் ரமேஷ் உத்தரவின்பேரில், திருவள்ளூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஒண்டிகுப்பத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரு சில கடைகள் திறந்திருந்ததும், அங்குள்ள முனீஸ்வரா் கோயிலில் கூட்டம் சோ்த்து காதணி விழா நடத்தியதும் தெரியவந்தது.
முழு ஊரடங்கு, கரோனா பரவல் விதிமுறைகளை மீறி தொற்று பரவும் வகையில் கூட்டம் சோ்த்தாக 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும், 11 கடைக்காரா்களுக்கு ரூ.21 ஆயிரமும் என ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.