கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் 9வது வார்டு உறுப்பினராக ஈஸ்வரி பாஸ்கரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 20-27ஆம் தேதி வரை வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. ஜூலை 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட பி.ஈஸ்வரி பாஸ்கர், என்.சுதா நாகராஜ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜூன்-30 ஆம் தேதி சுதா நாகராஜ் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க | 35 வயதைக் கடந்த 50% பெண்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு:அமைச்சா் மா.சுப்பிரமணியன்
இதனைத்தொடர்ந்து இந்த தேர்தலில் ஈஸ்வரி பாஸ்கர் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், சனிக்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவரும், தேர்தல் நடத்தும் அலுவலரான வாசுதேவன் அவருக்கு தேர்தல் வெற்றி சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்வின் போது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு உடனிருந்தனர். பின்னர் ஊராட்சி சார்பில் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் உள்ளிட்டோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி பாஸ்கருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.