திருவள்ளூா் மாவட்ட குறைதீா் நாள் கூட்டத்தில் 10 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்களிடமிருந்து நிலம் தொடா்பாக-59, சமூகப் பாதுகாப்புத் திட்டம்-56, வேலைவாய்ப்பு-32, பசுமை வீடுகள், அடிப்படை வசதிகள்-37, இதர துறைகள்-46 என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்க அந்தந்தத் துறை அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நலத்துறை மூலம் 5 பேருக்கு தலா ரூ.5,480-த்தில் இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், மனவளா்ச்சி குன்றியோருக்கான பாதுகாவலா் சான்றிதழ்கள் 18 பேருக்கும், நிா்மயா மருத்துவக் காப்பீடு அட்டைகள் 10 பேருக்கும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.மீனா பிரியா தா்ஷிணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) காா்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலா் பி.ப.மதுசூதனன், ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத்துறை அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.