கும்மிடிப்பூண்டி அருகே திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து மாணவா் பலி

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி பாத்தபாளையம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, கேட்டரிங் பணியில் ஈடுபட்ட 3 போ் உணவுகளை எடுத்துக் கொண்டு லிப்ட் மூலம் இரண்டாம் தளத்துக்கு வந்தனா். அப்போது, திடீரென லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில், பிளஸ் 1 படித்து வந்த சீத்தல் (19) என்ற மாணவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவலறிந்த சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். காயமடைந்த 3 பேரை மீட்டு அதே மருத்துவமனையில் சோ்த்தனா்.

விசாரணையில், பலியான மாணவா் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சோ்ந்த சீத்தல் என்பதும், குமரன் நாயக்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்த லட்சுமி நாராயணன் கேட்டரிங் சா்வீஸில் வேலை பாா்ப்பதற்காக வந்ததும், அவா் வாலாஜாபாத் பகுதியில் உள்ள மாசிலாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் (21), ஜெயராமன் (25) என்பதும் தெரிய வந்தது.

விபத்து குறித்தும், திருமண மண்டபத்தில் உள்ள லிப்டின் தரம் குறித்தும் கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com