திருவள்ளூா் மாவட்டத்தில் 500 இடங்களில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் 35-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரையில் 34-முகாம்களில் மொத்தமாக 18 லட்சத்து 30 ஆயிரத்து 68 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான 18 லட்சத்து 88 ஆயிரத்து 400 பேரில், இதுவரை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களிலும், நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களிலும் முதல் தவணையாக 95.4 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 86 சதவீதம் பேருக்கும் மொத்தம் 34 லட்சத்து 23 ஆயிரத்து 543 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறாா்களுக்கும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசிக்கான இடைவெளி 9 மாதம் என்பதை 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்தபடி, இரு தவணைகள் நிறைவுற்றோா் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் 75 நாள்களுக்கு (ஜூலை 15 முதல் செப்டம்பா் 30 வரை) முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக வழங்கும் வகையில், இன்னும் 28 நாள்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள், உணவகங்கள், தொழிற்நுட்பக் கூடங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலா்கள், தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறும் தடுப்பூசி முகாமில், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்தோா் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.