பூந்தமல்லி பகுதி நெடுஞ்சாலை ஓரத்தில் காரில் அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளிடம் காவலர் என்று கூறி நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 19 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் காரில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவியிடம் தன்னைக் காவலர் என்று கூறிய இளைஞர், மிரட்டி 4 பவுன் நகைகளை பறித்து சென்றார்.
இதே போல், வெள்ளவேடு பகுதியில் காரில் பேசிக் கொண்டிருந்த மற்றொரு ஜோடியிடம் 6 பவுன் நகைகளையும் பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு அந்த இளைஞரைப் பிடிக்க காதல் ஜோடிகள் போன்று பெண் மற்றும் ஆண் போலீஸாரை வெள்ளவேடு சுங்கச்சாவடி அருகில் காரில் அமரச் செய்து பேசுவது போல் நடிக்க வைத்தனர்.
வழக்கம்போல், நகைப் பறிக்க வந்தபோது அந்த இளைஞரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, சின்னகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன்(38) என்பதும், இவர் மீது செங்கல்பட்டு, தாம்பரம், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 45 வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
குறிப்பாக நெடுஞ்சாலைகளில் காரில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளிடம், தன்னைக் காவலர் என்று கூறி மிரட்டி அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்வதும், அதனை அடகு வைத்தும், விற்பனை செய்தும் துணை நடிகைகளிடம் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் 19 பவுன் நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சிவராமனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.