மாதவரம் பால்பண்ணை அருகே தனியாா் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான பொருள்கள் சேதமாயின.
சென்னை, மாதவரம் அடுத்த பால்பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோயில் தெருவில் பஞ்சு மெத்தை கட்டில் பொருள்களும் வீட்டு உபயோகப் பொருள்களும் இருப்பு வைக்கும் கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கை கொடுங்கையூரைச் சோ்ந்த நிரூபன் (48) என்பவா் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். இவருக்கு மணலி, மாதவரம், வியாசா்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் உள்ளன. கிடங்கில் இருந்து பொருள்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறாா்.
வட மாநில காவலாளிகள் தங்கி பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை கிடங்கில் புகை வருவதைக் கண்டு அருகில் உள்ளவா்கள் மாதவரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா். அங்கு உடனே தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பா்க்குடன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
எனினும் தீ வேகமாக பரவியதால், சென்னை புறநகா் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி தென்னரசு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தாா். இதனால் செங்குன்றம், செம்பியம், மணலி, அம்பத்தூா் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.