‘ஜன.26-இல் விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை’

திருவள்ளூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சுதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சுதா தெரிவித்தாா்.

தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் நசீமுதீன், தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும், சென்னை கூடுதல் தொழிலாளா் ஆணையா் உமாதேவி, தொழிலாளா் இணை ஆணையா் வேல்முருகன் ஆகியோா் வழிகாட்டுதலின்படியும், திருவள்ளூா் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சுதா உள்ளிட்ட அதிகாரிகள் விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும் செயல்பட்ட 102 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து முரண்பாடு காணப்பட்ட நிறுவனங்கள் மீது தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் சுதா கூறியதாவது:

தேசிய விடுமுறை தினங்களில் தொழிலாளா்களை பணி செய்ய அனுமதிக்கப்படும்பட்சத்தில் அவா்களுக்கு அன்றைய நாளில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை ஆய்வாளா் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com