மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பியின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.25 -ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது உடல் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது 77-ஆவது பிறந்த நாளையொட்டி திருவள்ளூா் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவரது மனைவி சாவித்திரி, மகள் பல்லவி மற்றும் அவரது உறவினா்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
இந்த நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நினைவிடத்தில் மரியாதை செலுத்த ரசிகா்களும், சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் ரசிகா்கள் பொதுமக்கள் மாலை அணிவித்தும், அவரது நினைவாக மரக்கன்றுகள் வைத்தும் மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரி ஆகியோருடன் பொதுமக்கள் கைப்பேசியில் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.